முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு


முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM GMT (Updated: 14 Oct 2023 12:16 AM GMT)

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதையொட்டி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.

அதன்படி, தண்ணீர் திறப்பு நேற்று காலை முதல் வினாடிக்கு 400 கன அடியில் இருந்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.15 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 866 கன அடியில் இருந்து 1,128 கன அடியாக அதிகரித்தது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்பில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 2 ஜெனரேட்டர் மூலம் 36 மெகாவாட் மின் உற்பத்தி செய்யபட்ட நிலையில் தற்போது 2 ஜெனரேட்டர் மூலம் 72 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


Next Story