முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு:லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:47 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தேனி

தண்ணீர் திறப்பு

கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின் உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் உள்ளன. ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

ஒரு ஜெனரேட்டருக்கு 450 கன அடி வீதம் தண்ணீர் தேவைப்படும். கடந்த வாரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இதனால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டர் மூலம் 72 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

மின் உற்பத்தி அதிகரிப்பு

இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,157 கன அடியாக அதிகரித்தது. இதையொட்டி நேற்று காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி, நீர் திறப்பு வினாடிக்கு 800 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக அதிகரித்தது. இதனால் லோயர்கேம்பில் உள்ள மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- முல்லைப்பெரியாறு 7, தேக்கடி 101.4, கூடலூர் 1, உத்தமபாளையம் 3.8, சண்முகா நதி அணை 2.4, வைகை அணை 3.6, மஞ்சளாறு 18, சோத்துப்பாறை 2, ஆண்டிப்பட்டி 2.


Next Story