காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்: மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்: மத்திய அரசுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 20 July 2023 6:29 AM GMT (Updated: 20 July 2023 6:35 AM GMT)

இந்த கடிதத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரியை இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.

சென்னை,

குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும் என மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முக்கியமாக,

ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 17ம் தேதி வரை பிலிகுண்டுலுவில் இருந்து பெறப்பட்ட நீரில் அளவு 3.78 டிஎம்சி மட்டுமே என்றும், இந்த காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டிஎம்சி என உள்ள நிலையில், 22.54 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடவில்லை என்றும், இதனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாக குறைந்துவருகிறது என்றும், தற்போதைய நீர் இருப்பு 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்கு பயன்படும் என்றும் முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு செய்துவருவதாகவும், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு தான் பற்றாக்குறையை பூர்த்திசெய்ய இயலும் எனவும் முதல் அமைச்சர் அந்த கடிதத்தில் குறிபிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.


Next Story