காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்


காவிரி கரைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
x

காவிரி கரைகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டதால் திரளான பொதுமக்கள் குவிந்தனர்.

திருச்சி,

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இதில் ஆடி 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த விழாவானது காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் காவிரி கரையோரங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும்.

குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையில் கொண்டாடப்படவில்லை. இதனால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நேற்று கொண்டாடப்பட்டதால் காவிரி கரையோரம் திரளான பக்தர்கள் பங்கேற்று காவிரித்தாயை வழிபட்டனர்.

புனித நீராடி வழிபாடு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் வந்து மிகுந்த மகிழ்ச்சியோடு படித்துறையில் வழிபாடு நடத்தினார்கள்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் வர தொடங்கினர். திருச்சி மட்டுமில்லாமல் அரியலூர், பெரம்பலூர் உள்பட வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் உற்சாகமாக வந்திருந்தனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் பக்தர்கள் புனித நீராடினர்.

மஞ்சள் கயிறு கட்டி விட்டனர்

அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறைகளில் பக்தர்கள் வாழை இலை விரித்து படையலிட்டனர். வீட்டில் மூத்த சுமங்கலி பெண்கள் அந்த படையலுக்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர்.

மஞ்சள் கயிறு பூஜைக்கு பின் சுமங்கலி பெண்கள் மற்ற சுமங்கலி பெண்களின் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு கையில் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். மேலும் திருமணமாகாத இளம்பெண்களுக்கு கழுத்திலும், இளைஞர்களுக்கு கையிலும் மஞ்சள் கயிறு கட்டி விட்டனர். சுமங்கலி பெண்கள் தங்களது மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். புதுமண தம்பதிகள் தாலி சரடுகளை மாற்றி கட்டி வீட்டில் மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசிபெற்றனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டத்திலும் திருவையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பவானியில் தடை

ஆடிப்பெருக்கு தினத்தில் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் காவிரியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பவானி மற்றும் கொடுமுடியில் 270 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பக்தர்கள் புனித நீராடவும், திதி கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டதால் பவானி கூடுதுறை வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story