இலவச கட்டாயக் கல்வி திட்டம்: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


இலவச கட்டாயக் கல்வி திட்டம்: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை-இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
x

விண்ணப்பப் பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

சென்னை,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை கல்விக்கட்டணம் செலுத்தும்.

அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (மே) 20-ந் தேதி ஆகும்.

விண்ணப்பப் பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், அந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.


Next Story