சத்தியமங்கலத்தில் பரபரப்பு; ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டி


தினத்தந்தி 21 Aug 2022 8:48 PM GMT (Updated: 21 Aug 2022 8:50 PM GMT)

சத்தியமங்கலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒற்றை தலைமை விவகாரம்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் ஜூலை 11-ந் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அதில், ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், பொதுக்குழுவுக்கு முன்பிருந்த நிலையை தொடர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் இணைந்து செயல்படலாம் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் மனக்கசப்பு இருந்து வருகிறது.

ஆதரவாக சுவரொட்டிகள்

ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அ.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் உள்ளனர். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று காலை பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர். அமைதியின் சின்னம். கழக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர் உள்ளிட்ட வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.


Next Story