ஈரோட்டில் அ.தி.மு.க. கூட்டம்: நமக்கான ஓட்டுகளை பெற்றாலே 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம்- முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு


ஈரோட்டில் அ.தி.மு.க. கூட்டம்: நமக்கான ஓட்டுகளை பெற்றாலே 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம்- முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு
x

நமக்கான ஓட்டுகளை பெற்றாலே 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று ஈரோட்டில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

ஈரோடு

நமக்கான ஓட்டுகளை பெற்றாலே 40 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்று ஈரோட்டில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.

சிறந்த திட்டங்கள்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை என்றுக்கூறி 40 சதவீதம் பேருக்கு கூட தி.மு.க. ஆட்சியில் கிடைக்கவில்லை. பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், மாணவர்களுக்கு மடிக்கணினி என பல்வேறு சிறந்த திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் தி.மு.க. நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து மக்களை சந்தித்து தெரிவிக்க வேண்டும்.

வெற்றி பெறலாம்

அ.தி.மு.க., பா.ஜனதா தனித்து இருப்பது குறித்து யோசிக்க வேண்டாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 50 தொகுதிகளுக்கு மேல் மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். அதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 8 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டது. நமக்கான ஓட்டுகளை பெற்றாலே புதுச்சேரியுடன் சேர்த்து 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரத்வி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி அவைத்தலைவர் மீன்ராஜா என்கிற வி.ராஜசேகரன், மாவட்ட பிரதிநிதி சூர்யசேகர், கஸ்தூரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story