கடலை சாகுபடிக்கு தரமான விதைகள் வாங்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்


கடலை சாகுபடிக்கு தரமான விதைகள் வாங்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
x

கடலை சாகுபடிக்கு தரமான விதைகள் வாங்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தற்போது கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடி தொடங்கி உள்ளது. தரமான விதைகள் சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைத்திட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை விதைகளை வாங்கும்போது தமிழ்நாடு அரசால் விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே தங்களுக்கு தேவையான நிலக்கடலை விதைகளை வாங்க வேண்டும். விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் ரக விதைகளை வாங்கும்போது விதைக்கான விற்பனை ரசீதை கேட்டுப்பெற வேண்டும். மேலும், தாங்கள் வாங்கிய விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

வியாபாரிகள் நிலக்கடலை விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். விதை விற்பனை செய்யும் வியாபாரிகள் விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். விதை விற்பனை உரிமமின்றி விதைகளை விற்பனை செய்தாலோ, காலாவதியான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்தாலோ, ரசீது வழங்காமல் விற்பனை செய்தாலோ விதை சட்டப்படி விற்பனையாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதைகள் தொடர்பான ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 0431-2420587 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.


Next Story