20 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பு

ராசிபுரம் அருகே 20 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவற்றை அழித்து புதைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராசிபுரம்
வெண் பன்றிகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவர் சில ஆண்டுகளாக வெண் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். இங்கு வளர்க்கப்படும் வெண் பன்றிகளை கேரளா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரது பண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றிகளில் 2 பன்றிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென இறந்தன. இதுகுறித்து அவர் நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் அவற்றின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்க வைரஸ் தாக்கி பன்றிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆப்பிரிக்க வைரஸ்
இந்த நிலையில் அந்தப் பண்ணையை நேற்று முன்தினம் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பண்ணையில் இருந்த பன்றி குட்டிகள் உள்பட 20 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த பன்றிகளை அழித்து 15 அடி ஆழம் குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பண்ணை அமைந்துள்ள இடத்திலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அழிக்க நடவடிக்கை
இது தொடர்பாக கால்நடை துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ராசிபுரம் பண்ணையில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ மற்ற கால்நடைகளுக்கோ பரவாது. பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும். இந்த நோயானது நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்கு பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும்.
இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய். எனவே தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவைக்கொண்ட நடைபாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் வெளியாட்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அச்சப்படத் தேவையில்லை
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர் ஆகியோர் இதுபற்றி கூறும்போது, மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றி செல்லும் போது அது குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அருகாமையில் உள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுபற்றி எவ்வித அச்சமும் படத் தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் ராசிபுரம் தாசில்தார் சுரேஷ் சம்பவ இடத்திற்கு சென்று பண்ணையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.






