நோயாளியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு வாலிபர்கள் தப்பி ஓட்டம்


அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பி சென்ற வாலிபர்களை கைது செய்யக்கோரி நோயாளியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

பீர்பாட்டிலால் தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எரிச்சி சிதம்பரவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் சுதாகர் (வயது 37), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சிலட்டூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் (45) மற்றும் வாலிபர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது சுதாகரின் தம்பி கார்த்திக் (35) தனது அண்ணனை அழைத்து செல்ல அங்கு வந்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த நடராஜன் மற்றும் அவரது நண்பர்கள் சுதாகர் மற்றும் கார்த்திக்கை பீர்பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த சுதாகர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கழுத்தறுப்பு

இந்தநிலையில் நடராஜன் உள்ளிட்ட வாலிபர்கள் 4 பேர் நேற்று இரவு 9 மணியளவில் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சுதாகரை பார்க்க சென்றனர். அப்போது நடராஜன் தான் வைத்திருந்த பிளேடால் சுதாகரின் கழுத்தை அறுத்தார். இதனைகண்டு அதிர்ச்சியடைந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் நடராஜன் உள்ளிட்டோர் ஆட்டோவில் தப்பி சென்றனர். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த சுதாகருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுதாகரின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தப்பி ஓடிய நடராஜன் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story