வேளாண்மை தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் வட்டாரத்தில் முதுகுளத்தூர் பஸ் நிலையம் தேரிருவேலி மற்றும் திருவரங்கம் ஆகிய கிராமங்களில் அட்மார்க் திட்டத்தின் கீழ் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி மூலம் வேளாண்மை திட்டங்களை விவசாயிகளுக்கு விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை இயக்குனர் கேசவராமன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அத்திட்டத்தின் பண்ணைக்கருவிகள், ஜிப்சம், தார்ப்பாய், தென்னை கன்று மற்றும் உயிர் உரங்கள், வேளாண்மை கருவிகள் போன்றவை மானியமாக வழங்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் விவசாயம் மானாவரி நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் மற்றும் மானாவாரி சாகுபடி உற்பத்திகளை சார்ந்தே இருக்கும். இதனால் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நேர்த்தி, விதை கடினப்படுத்துதல், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் முதலிய உத்திகளை கையாண்டு அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மேலாண்மை வளர்ச்சி திட்டம், பயிர் காப்பீடு மண் மாதிரி சேகரித்தல், விதை நேர்த்தி, விதை கடினப்படுத்துதல், நுண்ணுயிர் பாசனம் பற்றி கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து மண் மாதிரிகள் சேகரிப்பு ஆய்வு செய்து ஆய்வின் அடிப்படையில் உரங்கள் இடவேண்டும். நெல்லுக்கு பின் பயறு வகைகள் சாகுபடி குறித்தும் துணை வேளாண்மை அலுவலர் தனதுரை கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மெய்விழி மற்றும் சுரேந்திர குமார் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் அட்மா திட்ட மேலாளர் முனியசாமி நன்றி கூறினார்.