அதிமுக பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி எழுத்துப்பூர்வ பதில் தாக்கல்


அதிமுக பொதுக்குழு வழக்கு:  சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி எழுத்துப்பூர்வ பதில் தாக்கல்
x

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது யார்? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வெளியானது. தனி நீதிபதி முதலில் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் பின்னர் அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் இருந்தன.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், கட்சியில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் தன்னிச்சையாக நீக்கப்பட்டதும் செல்லாது என்று வாதிடப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் விசாரணை தொடர்ந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் ஆகியோர் 16-ந்தேதிக்குள் இரு தரப்பினரும் எழுத்துப் பூர்வமாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர். இதன்படி ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் 39 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்து எழுத்துப்பூர்வ பதில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இனி தீர்ப்பு மட்டுமே வெளியாக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது பிப்ரவரி 2-வது வாரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story