அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு தாக்கல்


அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு- சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
x

அதிமுக தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சசிகலா சென்னை உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை ஏற்ற உரிமையியல் கோர்ட், வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் வழக்கின் மதிப்புக்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் எனவும் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, பதிவுத்துறையில் சரி பார்த்த பிறகு தான் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டால் தனது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story