திருவட்டார் அருகே விமான நிறுவன பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை


திருவட்டார் அருகே விமான நிறுவன பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2023 7:15 PM GMT (Updated: 10 Jun 2023 7:15 PM GMT)

திருவட்டார் அருகே தனியார் விமான நிறுவன பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே தனியார் விமான நிறுவன பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விமான நிறுவன ஊழியர்

திருவட்டார் அருகே உள்ள வீயன்னூர் நாணயம் தோட்டத்துவிளையைச் சேர்ந்தவர் நாகராஜன், தொழிலாளி. இவருடைய மகள் தர்ஷினி (வயது 22). பட்டதாரியான இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் விமான நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்த தர்ஷினிக்கு திடீரென உடநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தற்கொலை

அங்கு சிகிச்சை பெற்றும் உடல்நலம் சீராகாததால் அவரை திருவனந்தபுரத்திலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது, தர்ஷினி விஷம்(எலி மருந்து) குடித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று தர்ஷினி பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தர்ஷினியின் தாயார் உஷா திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்ஷினி விஷம் குடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தனியார் விமான நிறுவன பெண் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story