அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு


அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:45 PM GMT)

எம்.பில். சான்றிதழ்களை திரும்ப ஒப்படைப்பதாக கூறி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

எம்.பில். சான்றிதழ்களை திரும்ப ஒப்படைப்பதாக கூறி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோடைகால சிறப்பு வகுப்புகள்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.பில் (ஆய்வியல் நிறைஞர்) பட்ட படிப்புகளுக்கான கோடைகால சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர் பணிகளில் இருந்த பெரும்பாலானோர் கூடுதல் தகுதி பெறுவதற்காக சேர்ந்து படித்து சான்றிதழ்களை பெற்றனர். இந்த கூடுதல் கல்வித்தகுதியை பெற்றவர்களுக்கு வேலை பார்க்கும் இடங்களில் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படுவது உண்டு.

இவ்வாறு பலரும் ஊக்கத்தொகை பெற்று வந்தனர். சிலர் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் தணிக்கை துறையினர் நடத்திய ஆய்வில் கோடைகால சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் செல்லாது இதற்கு (யு.ஜி.சி) பல்கலைக்கழக நிதிநிலைக்குழு அனுமதி இல்லை என கூறி வழங்கப்பட்ட ஊக்கத்தொகையினை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டது. மேலும் பதவி உயர்வினை எதிர்பார்த்து காத்திருந்த சிலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

பல்கலைக்கழகத்தில் போராட்டம்

இது குறித்து சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்துவிட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிலர் கூறுகையில், பல்கலைக்கழக தரப்பில் அழகப்பா பல்கலைக்கழகம் ஏ பிளஸ் அங்கீகாரம் பெற்றது.தர வரிசையில் முதல் வகையிலான தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது. எனவே கோடைகால சிறப்பு வகுப்புகள் செல்லும் என்று கூறப்பட்டாலும் அதற்குரிய விவரங்களை உரிய முறையில் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. எனவே இந்நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினர்.

மேலும் பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காரைக்குடி பல்கலைக்கழக அலுவலக பிரதான வாயிலின் முன்பாக அமர்ந்து பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட எம்.பில். சான்றிதழ்களை பல்கலைக்கழகத்திலேயே ஒப்படைகிறோம் என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களை அழைத்து பேசி வழக்குகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story