விஷ சாராய சாவு: கொலை வழக்காக மாற்றம்: மெத்தனால் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்


விஷ சாராய சாவு: கொலை வழக்காக மாற்றம்: மெத்தனால் கிடைத்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
x

விஷ சாராய உயிரிழப்பு வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஷ சாராயம் தயாரிப்பதற்கு மெத்தனால் சப்ளை செய்த சென்னை கம்பெனியின் அதிபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு கொலை வழக்காகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 13-ந்தேதி அன்று நடந்த விஷச்சாராய சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 13 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் சென்னை வானகரம் 'ஜெய சக்தி பிரைவேட் லிமிடேட்' கம்பெனியின் அதிபர் இளையநம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மெத்தனாலை செங்கல்பட்டு, சித்தாமூரில் விற்பனை செய்த அமாவாசை என்பவரும் மரக்காணத்தில் விற்பனை செய்த அமரன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதோடு இவர்களுக்கு விற்பனை செய்த நபர்களை பற்றிய புலன் விசாரணை மேற்கொண்டதில் விஷசாராயம் 'ஜெய சக்தி கெமிக்கல் பிரைவேட் லிமிடேட்' என்ற கம்பெனியிலிருந்து கொண்டு வந்ததாக தெரியவந்தது.

இந்த கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி இதை 2018-ம் ஆண்டு வாங்கி உள்ளார். கொரோனா காரணமாக இதை தொழிற்சாலையில் பயன்படுத்த இயலாமல் போய் உள்ளது. இதனால் இவரது தொழிற்சாலை திவாலாகி உள்ளது. இந்த நிலையில் 1,200 லிட்டர் விஷச்சாராயத்தை (200 லிட்டர் கொண்ட 6 பேரல்களில்) புதுச்சேரியை சேர்ந்த பரகதுல்லா என்ற ராஜா மற்றும் ஏழுமலை என்பவருக்கு கள்ளச்சந்தையில் ரூ.66 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். இவர்கள் மூலமாகவே மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு மரணம் ஏற்படுத்திய விஷச்சாராயம் கிடைத்திருப்பது தெரியவந்தது.

மேலும், விஷ சாராய தொழிற்சாலையில் இருந்து மரக்காணம் மற்றும் சித்தாமூர் பகுதிகளுக்கு விஷ சாராயத்தை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்ட விளாம்பூர் விஜி என்பவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் 400 லிட்டர் விஷ சாராயம் வாங்கி அதை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார். இவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் மீது 6 திருட்டு வழக்குகளும், 5 மதுவிலக்கு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

1200 லிட்டர் விஷ சாராயத்தை வாங்கியவர்கள் 5 லிட்டர் மரக்காணத்திலும், 3 லிட்டர் சித்தாமூரிலும் விற்பனை செய்துள்ளனர். மீதமிருந்த 1,192 லிட்டரை 48 மணி நேரத்தில் பல்வேறு நபர்களிடமிருந்து காவல்துறையினர் விரைந்து கைப்பற்றினர்.

இந்த விஷ சாராயம் பறிமுதல் செய்யப்படாமல் போயிருந்தால், இது பல ஊர்களுக்கும் சென்று பெருமளவில் உயிர் சேதம் ஏற்படுத்தியிருக்கும்.

வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டாக்டர் கண்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பெரும் உயிர் சேதம் ஏற்படுவதை தடுத்துவிட்டனர்.

உயிர் இழப்பை ஏற்படுத்திய கள்ளச்சாராயம், கிராமப் பகுதிகளில் காய்ச்சி வடிக்கப்பட்ட கள்ளச்சாராயம் அல்ல, தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் எரிச் சாராயமும் அல்ல. இது தொழிற்சாலைகளில் தின்னர் போன்ற பொருட்களைத் தயார் செய்ய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதாலும், இது மனிதர்களின் உயிர்களை பறிக்கும் தன்மையுள்ளது என்பதாலும் இவற்றை விற்பனை செய்த ஜெய சக்தி கெமிக்கல் கம்பெனியினுடைய அதிபர் இளையநம்பி, பரகத்துல்லா என்கிற ராஜா, ஏழுமலை, விளாம்பூர் விஜி மற்றும் 13 பேர் மீது மரக்காணம் போலீஸ் நிலையம் மற்றும் சித்தாமூர் போலீஸ் நிலையங்களிலுள்ள வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள், 71 மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடைய துணையோடு ஆய்வுச் செய்து கையிருப்பு மெத்தனாலை சரிபார்க்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜ.க. நிர்வாகி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விளாம்பூர் விஜி பா.ஜ.க. நிர்வாகி ஆவார்.


Next Story