குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.68 கோடி ஒதுக்கீடு


குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.68 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 10:45 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கத்துடன் முழுக்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 340 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதை வழங்குவதற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.68 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு, நகர்ப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 300 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கிராமப்புற பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 200 பேருக்கும் வழங்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். ஆகவே தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் எவ்வித சிரமமும் இன்றி பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story