விசைப்படகில் மின்சாரம் தாக்கி இறந்தது அம்பலம்


விசைப்படகில் மின்சாரம் தாக்கி இறந்தது அம்பலம்
x

விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி ஒடிசா தொழிலாளி பலியானது அம்பலமானது.

கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே உள்ள தூத்தூரை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஒடிசா மாநிலம் ஜஜபுரை சேர்ந்த தொழிலாளி பன்சிதர் மாலிக் (38) உள்பட 12 மீனவர்கள் கடந்த 8-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் 18-ந் தேதி தேங்காப்பட்டணம் கடல் பகுதியில் தெற்காக 225 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென பன்சிதர் மாலிக் இறந்தார். அவர் படகில் தவறி விழுந்து இறந்ததாக முதலில் கூறப்பட்டது.

தொடர்ந்து அவரது உடலை சக மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் ஜஸ்டின் குளச்சல் கடலோர காவல் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பன்சிதர் மாலிக் சம்பவத்தன்று மீன்பிடித்து கொண்டிருந்த போது கால் தடுமாறி மின் விளக்கு மீது விழுந்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பன்சிதர் மாலிக்கின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஒடிசா தொழிலாளிக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.


Next Story