காதல் திருமணம் செய்த வாலிபரை கொன்று ஆற்றில் வீசியது அம்பலம்


காதல் திருமணம் செய்த வாலிபரை கொன்று ஆற்றில் வீசியது அம்பலம்
x

காதல் திருமணம் செய்த வாலிபரை கொன்று ஆற்றில் வீசியது அம்பலமானது.

திருச்சி

தொட்டியம்:

காதல் திருமணம்

கரூர் மாவட்டம், கருப்பம்பட்டியை சேர்ந்த மணியின் மகன் கிருஷ்ணமூர்த்தி(வயது 25). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர், கருப்பம்பட்டியை சேர்ந்த கோபிகாவை(19) காதலித்து கடந்த மாதம் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோபிகா, கிருஷ்ணமூர்த்திக்கு தங்கை உறவு முறை என்றும், இதனால் இவர்கள் திருமணம் செய்து கொண்டது கோபிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கடந்த 21-ந் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக ஆஜராக திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள கோர்ட்டுக்கு காரில் வந்தார். பின்னர் அவர் கோர்ட்டில் இருந்து அதே காரில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இதற்கிடையே இது பற்றி அறிந்த கோபிகாவின் உறவினர்கள் மற்ெறாரு காரில் அங்கு வந்தனர். இதையடுத்து அவர்கள், கிருஷ்ணமூர்த்தி வந்த காரை மறித்து நிறுத்தினர். பின்னர் கிருஷ்ணமூர்த்தியை பிடித்து அவர்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

போலீசார் விசாரணை

இந்நிலையில் வெகு நேரம் ஆகியும் கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பாததால் கோபிகா கவலை அடைந்தார். மேலும் இது குறித்து தொட்டியம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருஷ்ணமூர்த்தியை காரில் கடத்தியதாக கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த புதுக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீநாத் (24), கார்த்திக் (25), கோயம்பள்ளியை சேர்ந்த சரவணன் (29), கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி, கடந்த 24-ந் தேதி சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

ஆனால் கிருஷ்ணமூர்த்தி மீட்கப்படவில்லை. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கோபிகாவின் அண்ணன் ரவிவர்மன்(22), அவரது நண்பர் தினேஷ்(33), கோபிகாவின் தாய் ஹேமலதா(37), அவரது தாய் பாப்பாத்தி(57) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

கழுத்தை நெரித்து கொலை

இதில், சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தியை காரில் கடத்திச்சென்ற அவர்கள், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை தஞ்சை மாவட்டம், தோகூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சுக்காம்பாறை காவிரி ஆற்றில் வீசிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து கடத்தல் என்று பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றி, ரவிவர்மன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக கோபிகாவின் சித்தி இந்திரா, சித்தப்பா பிரகாஷ், ரவிவர்மனின் நண்பர்கள் பத்திரி, மோகன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே சுக்காம்பாறையில் உள்ள ஆற்றில் கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் அவரது உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story