சாலை வசதி இல்லாததால் நடுரோட்டில் விட்டு சென்ற ஆம்புலன்ஸ்.. இறந்த பெண்ணின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்..!


சாலை வசதி இல்லாததால் நடுரோட்டில் விட்டு சென்ற ஆம்புலன்ஸ்.. இறந்த பெண்ணின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்..!
x

சாலை வசதி இல்லாததால் இறந்த பெண்ணின் உடலை அவரது உறவினர்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் எலந்தம்பட்டு மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சாந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலகுறைவால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் அரசு ஆம்புலன்ஸ் மூலம் எலந்தம்பட்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள படவேடு மலை அடிவாரம் வரை கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து எலந்தம்பட்டு கிராமத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாததால் சாந்தியின் உடலை மலை அடிவாரத்திலேயே இறக்கிவிட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதையடுத்து அவரது உறவினர்கள் சாந்தியின் உடலை மலை அடிவாரத்தில் நேற்று மாலை வரை வைத்திருந்தனர். சாலை வசதி இல்லாத காரணத்தினால் எப்படி கொண்டு செல்வது என வேதனையுடன் அவர்கள் பரிதவித்தனர். பின்னர் அவரது உறவினர்கள் நீண்ட மர கட்டையில் டோலி அமைத்து சாந்தியின் உடலை எடுத்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

படவேடு மலை அடிவாரப் பகுதியில் இருந்து எலந்தப்பட்டு கிராமத்திற்கு சுமார் 6 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. எலந்தப்பட்டு பகுதியில் இருந்து போதிய சாலை வசதி இல்லாத காரணத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடலை டோலி அமைத்து கொண்டு வந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு எலந்தம்பட்டு கிராமத்திற்கு மட்டுமின்றி சாலை வசதியில்லாத மலை கிராமங்களுக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story