எண்ணூர்: அமோனியா வாயு கசிவை உறுதி செய்தது மாசு கட்டுப்பாட்டு வாரியம்!


எண்ணூர்: அமோனியா வாயு கசிவை உறுதி செய்தது மாசு கட்டுப்பாட்டு வாரியம்!
x
தினத்தந்தி 27 Dec 2023 4:07 AM GMT (Updated: 27 Dec 2023 4:54 AM GMT)

எண்ணூரில் காற்றில் அமோனியா வாயு பரவியுள்ளது.

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு கப்பல் மூலம் திரவ அமோனியா எடுத்துவர ஏதுவாக கடலில் இருந்து தொழிற்சாலைவரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெரியகுப்பம் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறினர். உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில், உரத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா எடுத்துவரும் குழாயில் அமோனியா வாயு கசிந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோகிராம்/எம்3 ஆக இருக்கவேண்டிய அமோனியா 2,090 மைக்ரோகிராம்/எம்3 ஆக உள்ளது.

கடலில் 5 மைக்ரோகிராம்/எல் ஆக இருக்கவேண்டிய அமோனியா, 49 மைக்ரோகிராம்/எல் ஆக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்கு அமோனியா கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து இனி தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டுமென மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


Next Story