தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி நடக்கிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி நடக்கிறது.
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:47 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி நடக்கிறது. இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து ெசல்லப்பட உள்ளனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கலைத்திருவிழா

தமிழக அரசின் அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கலைவடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒருபகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்புகளில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

போட்டிகள்

இந்த போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் தனிநபர் அல்லது குழுக்களாக பங்கேற்கலாம். 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் ஆகிய 6 போட்டிகளும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை- தோற் கருவி, கருவி இசைதுளை – காற்றுக் கருவிகள், கருவி இசைதந்திக் கருவிகள், இசைச் சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் ஆகிய போட்டிகளும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, தோற் கருவி, கருவி இசை – துளை / காற்றுக்கருவி, கருவி இசை – தந்திக் கருவிகள், இசைச் சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் ஆகிய போட்டிகள் நடக்கிறது. போட்டிகள் தனிநபராக அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம். ஒருவர் ஏதேனும் மூன்று தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்கு பெற முடியும்.

கல்வி சுற்றுலா

பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவர்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் முதல் 2 இடங்களை பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மாநில அளவிலான கலைத்திருவிழா இறுதி போட்டிகள் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி ஆகிய விருதுகளும் வழங்கப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

மாவட்டத்தில் பள்ளி அளவிலான போட்டிகள் வருகிற 14-ந் தேதிக்குள்ளும், வட்டார அளவிலான போட்டிகள் வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதிக்குள்ளும், மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதிக்குள்ளும், மாநில அளவிலான போட்டிகள் 21.11.23 முதல் 24.11.23-ந் தேதிக்குள்ளும் போட்டிகள் நடத்தப்படுகிறது. வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்கு பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிக்கொணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story