ஓடும் லாரியில் இருந்து கழன்று ஓடிய டயர் மோதி ஆட்டோ டிரைவர் பலி


ஓடும் லாரியில் இருந்து கழன்று ஓடிய டயர் மோதி ஆட்டோ டிரைவர் பலி
x

படப்பையில் ஓடும் லாரியில் இருந்து கழன்று ஓடிய டயர் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார்.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள கீழ் படப்பை பகுதியில் வசித்து வந்தவர் முரளி (வயது 51). ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 1-ந் தேதி படப்பை பஜார் பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் வேகமாக வந்த ஒரு லாரியின் பின்பக்க டயர் திடீரென கழன்று சாலையில் வேகமாக ஓடிச்சென்று, சாலையோரம் நடந்து சென்ற முரளி மீது பயங்கரமாக மோதியது.

டயர் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த முரளியை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முரளி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில் ஓடும் லாரியில் இருந்து கழன்று ஓடிவந்த டயர், முரளி மீது மோதி அவர் தூக்கி வீசப்படும் பதபதைக்க வைக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story