துணை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்


துணை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 May 2023 6:45 PM GMT (Updated: 8 May 2023 6:46 PM GMT)

அக்கடவல்லியில் துணை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் கலெக்டரிடம், மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 500-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது மாநில மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர், மாநில பொதுச் செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

எங்கள் சங்கம், தமிழக அரசின் தொழிலாளர் துறையில் பதிவு பெற்ற சங்கமாகும். எங்களது உறுப்பினர்களின் கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் நீண்ட தொலைவில் உள்ள கரும்பூர் அல்லது கண்டரக்கோட்டையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதில் ரெயில்வே பாதையை கடந்து செல்லும் போது, அவ்வழியாக ரெயில்கள் வந்தால் கால்நடைகளை ஓட்டிச் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அக்கடவல்லியில் துணை கால்நடை மருத்துவமனை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story