விநாயகர் சதுர்த்தி விழாவில்வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிலை அமைக்க வேண்டும் :கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


விநாயகர் சதுர்த்தி விழாவில்வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிலை அமைக்க வேண்டும் :கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Sep 2023 6:45 PM GMT (Updated: 8 Sep 2023 6:45 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழாவில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிைல அமைக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி


முழுமுதற்கடவுளான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சிலை வழிபாட்டு குழுவினருக்கான ஆலேசானை கூட்டம் கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டிபள்ளி வளாக கூட்டரங்கில் காவல்துறை சார்பில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், மணிகண்டன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

களிமண்ணால் ஆன சிலைகள்

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பேசியதாவது:-

சிலை வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்டவர்களிடம் ஆட்சேபனை இல்லா கடிதம் பெற வேண்டும். மேலும், ஒலிபெருக்கி அமைக்கவும், தற்காலிக மின்சாரம் வழங்குவதற்காகவும் உரிய அனுமதி பெறுதல் வேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள விதிகளின்படி களி மண்ணால் செய்த சிலைகள் வைத்து வழிபட வேண்டும். நீரில் கரையக்கூடிய நச்சுத்தன்மை இல்லாத இயற்கை சாயங்கள் பயன்படுத்த வேண்டும். 10 அடிக்கு மிகாமல் சிலை அமைக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட இடங்கள்

மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்களுக்கு அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும். காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் 5 நாட்களுக்குள் கரைக்க வேண்டும். பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என்று பல்வேறு ஆலேசானைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் அனைத்து உட்கோட்ட துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், இந்து முன்னனியினர், விநாயகர் சிலை அமைப்பாளர்கள், விழா குழுவினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story