தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை


தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை
x

கும்பகோணம் அருகே தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

ரத்தக்காயத்துடன் முதியவர் பிணம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவழஞ்சுழி பகுதியில் செல்லும் பைபாஸ் சாலையோரத்தில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் முகத்தில் பலத்த ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை பார்வையிட்டனர்.

தலையில் கல்லைப்போட்டு கொலை

பிணமாக கிடந்த முதியவரின் அருகே ரத்தக்கரை படிந்த கல் மற்றும் ரத்தம் வழிந்தோடிய நிலையில் காணப்பட்டது. இதனால் மர்ம நபர்கள் முதியவரின் தலையில் கல்லைப்போட்டுகொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story