அண்ணாமலை என்னைவிட பெரிய மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை- ஈவிகேஎஸ் இளங்கோவன்


அண்ணாமலை என்னைவிட பெரிய மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை- ஈவிகேஎஸ் இளங்கோவன்
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார்

சென்னை

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தோ்தல் 27 ஆம் தேதி நடக்கிறது. இந்த தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக திமுகவினா் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அமைச்சா்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, வி.செந்தில்பாலாஜி, ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உள்ளிட்டோா் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனா்.

திமுகவினா் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்து வருகின்றனா்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தனது தோ்தல் பிரசாரத்தை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கல் செய்தார்.

பின்னர் நிருபர்களீடம் பேசிய இளங்கோவன் கூறியதாவது:-

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதைக் காட்டிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை அதிகமாக விரும்புகிறேன். எனது மகன் பணியை நான் தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈரோடுக்கு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டத்திற்காக நான் பாடுபடுவேன். இதற்காக அமைச்சர் முத்துசாமி, முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுடன் இணைந்து செயல்படுவேன்.

இந்த தேர்தலில் நிச்சயமாக நாங்கள் மிகப் பெரும் வெற்றியை பெறுவோம். ஈரோடு மாநகர் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பாடுபடுவேன். இதைப்போல் சாயக்கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பாடுபடுவேன். திமுகவினர் தேர்தல் பணிகளை சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் மிகப் பெரிய வெற்றியை பெறுவோம் என்று இளங்கோவன் கூறினார்.

பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்க முயற்சி செய்து வருகிறாரே? என்ற கேள்விக்கு, அண்ணாமலையை பொறுத்தவரை அவர் என்னைவிட பெரிய மனிதர். நான் அவரை விட சின்ன மனிதர். அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. மேலும் எதைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலில் 30 ஆயிரம் பேரை புதிதாக இணைத்துள்ளார்கள் என்று புகார் அளித்துள்ளார். அது குறித்து இளங்கோவனிடம் கேட்டதற்கு, அவர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன என்று கூறினார்.


Next Story