மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்படும் என அறிவிப்பு


மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்படும் என அறிவிப்பு
x

வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரியன்று மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் நடை திறக்கப்பட உள்ளது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வருகிற 18-ந்தேதி மகா சிவராத்திரியன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு விடிய விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மேலும் இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை, அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை வருகிற 18-ந் தேதி மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் ஒப்படைக்கலாம். மேலும், 18-ந் தேதி இரவு முதல் மறுநாள் காலை வரை கோவில் நடை திறந்திருக்கும்.

சிவராத்திரி விழாவையொட்டி அன்று இரவு 4 கால பூஜைகள் நடைபெறும். அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும் நடைபெறும்.

அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்த சாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், காசி விசுவநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேசுவரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈசுவரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


Next Story