அரசு டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


அரசு டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

பழனியில், அரசு டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

டாக்டர் வீட்டில் கொள்ளை

பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயக்குமார் (வயது 55). பழனி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர். இவர், கடந்த 14-ந்தேதி வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தபோது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் புகுந்தனர்.

பின்னர் உதயக்குமாரை கத்தியால் குத்தி அவரை கட்டிப்போட்டனர். இதனையடுத்து வீட்டில் இருந்த 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

நெல்லையை சேர்ந்தவர் கைது

இந்நிலையில் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக பழனி பெரியகடைவீதியை சேர்ந்த சரவணக்குமாரை (41), பழனி போலீசார் ஏற்கனவே செய்தனர். அவரிடம் இருந்து ரூ.7 லட்சம் ரொக்கம், 34 பவுன் தங்க கட்டி, 5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கும்பிளம்பாடு பகுதியை சேர்ந்த சங்குபாண்டி (48) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இதனையடுத்து பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 15 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, சங்குபாண்டியின் உறவினர்கள் சிலர் பழனி அரசு டாக்டர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதும், இவர் அவர்களுக்கு உதவி செய்ததும் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை வலைவீசி தேடி வருகிறோம். விரைவில் அவர்களையும் கைது செய்வோம் என்று தெரிவித்தனர்.


Next Story