மாதவரம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


மாதவரம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x

மாதவரம் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது.

சென்னை

மாதவரம்,

சென்னையை அடுத்த மாதவரம் மண்டல அலுவலகத்தில் உள்ள வருவாய் துறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக மாதவரம் மண்டல அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் மற்ற துறை அலுவலர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவாய் ஆய்வாளர் சூரியபானு மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விசாரணையை தொடங்கினர். அங்கிருந்த முக்கிய ஆவணங்களையும் தீவிரமாக சோதனை செய்தனர்.

விடிய விடிய நடைபெற்ற இந்த சோதனை நேற்று காலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1 லட்சம் சிக்கியது.

அந்த பணம் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சமாக பெறப்பட்டதா? இல்லை பொதுமக்களிடம் நேரடியாக பெறப்பட்ட லஞ்சமா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.


Next Story