தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்


தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
x

தரமற்ற உணவு புகார்களுக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

கலப்பட உணவு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தரமற்ற, கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக, விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அறிமுகம் செய்துள்ளது.

ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான முறையில் உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்பு துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

செயலி அறிமுகம்

இதில் தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் கைபேசி செயலி Tn Food Safety Consumer App பதிவிறக்கம் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறும்போது:-

தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இதற்கான இணையதளம் மூலமும், கைப்பேசி செயலி மூலமும் தெரிவித்து பயனடையலாம்.

மேலும் புகார்தாரரின் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story