கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு - அமைச்சர் ரகுபதி


கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு - அமைச்சர் ரகுபதி
x

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். அதையடுத்து பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது.

வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26-ம் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி, பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் ஆசிரியைகள் இரண்டு பேரும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்தது.

அதில் ஆசிரியைகள் 2 பேரும் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்திலும், பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேரும் மதுரை மாவட்டம் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மாணவி மரண வழக்கில் ஸ்ரீமதியின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் பேட்டி அளித்த அவர் கூறும்போது,

சட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.


Next Story