முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்


முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
x

முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

திருவள்ளூர்

விருது

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். அதன்படி 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.8.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

இந்த விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதுல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 1.4.2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் 31.3.2023 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த 1.4.2022 முதல் 31.3.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

தமிழகத்தில் 5 ஆண்டுகள்

இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 31.5.2023 அன்று மாலை 4 மணி வரை கடைசி நாள் ஆகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பம், தங்கள் சாதனை பற்றிய பத்திரிக்கை செய்திகள் மற்றும் சான்றிதழ்களை 3 புத்தகங்களாக தயார் செய்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story