சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பசுமை சாம்பியன் விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு முன்மாதிரியான பங்களிப்பு அளித்த தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருதும், தலா ரூ.1 லட்சம் வீதம் பணம் முடிப்பும் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த விருது மொத்தம் 100 பேருக்கு வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு 2022-ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுகள் வழங்கப்படும்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், திடக்கழிவு மேலாண்மை, நீர்நிலைகள் பாதுகாப்பு, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை இதர சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட தனிநபர், நிறுவனங்கள் இந்த விருதை பெற தகுதி வாய்ந்தவை ஆகும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமைச் சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள், நிறுவனங்களை தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் www.tnpcb.gov.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருவள்ளூர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கும்மிடிப்பூண்டி அவர்களை அணுகலாம். பசுமைச்சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ந்தேதி வரை கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story