தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு -கலெக்டர் தகவல்


தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு -கலெக்டர் தகவல்
x

தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24-ன் கீழ் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை மற்றும் பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1 ஹெக்டேர் பரப்பளவில் தீவன பயிர்களான தீவனச்சோளம், கம்பு நேப்பியர், ஒட்டுப்புல் பயிர் வகைகள் பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் முதல் 1 ஹெக்டேருக்கு ரூ.7 ஆயிரத்து 500 வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.

மேலும் தீவன விரயத்தை குறைப்பதற்காக 10 எண்ணிக்கைகளிலான 2 குதிரை திறன் கொண்ட புல் நறுக்கும். கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.

அடுத்த மாதம் 15-ந்தேதி

இதில் பயன் பெற விருப்பமுள்ள விவசாயிகள் குறைந்த பட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் தீவன சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் பயனாளிகள் கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற அரசு திட்டங்களில் பயன் பெற்றவராக இருக்க கூடாது. சிறு, குறு விவசாயிகள், பெண்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினரும் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகளில் குறைந்த பட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கு அடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story