விவசாய பணிக்கு மானிய வாடகையில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


விவசாய பணிக்கு மானிய வாடகையில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

சிறு, குறு விவசாயிகள் விவசாய பணிக்கு 50 சதவீத மானிய வாடகையில் வேளாண் கருவிகளை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு உழவு பணிகளுக்கு டிராக்டர் மற்றும் கலப்பை, ரோட்ட வேட்டர் போன்ற கருவிகளை 50 சதவீத மானியத்துடன் அரசு வாடகைக்கு வழங்குகிறது. அந்த வகையில் வறண்ட நிலத்திற்கு 50 சதவீத மானியத்தில் 1 ஏக்கர் நிலத்திற்கு ரூ.250 வீதம் ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதிகபட்சமாக 5 மணி நேரத்திற்கு 5 ஏக்கர் நிலத்துக்கு மானியமாக ரூ.1,250 வருடத்திற்கு ஒருமுறை விவசாயிகள் பெறலாம். அதைபோல ஈர நிலத்தில் 50 சதவீத மானியத்தில் உழவு பணிக்கு தேவைப்படும் டிராக்டர் (உழவு கருவியுடன்) 1 ஏக்கர் நிலத்திற்கு ரூ.250 வீதம் ஒரு மணி நேரத்திற்கும் அல்லது அதிகபட்சமாக 5 மணி நேரத்திற்கு மானியமாக ரூ.625 வருடத்திற்கு ஒருமுறை விவசாயிகள் பெறலாம்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு, குறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று அல்லது கிசான் திட்டத்தில் பயன் பெற்று வருவதற்கான சான்று அல்லது நுண்ணீர் பாசனத்திட்டத்தில் 100 சதவீதம் மானியத்தில் பாசன கருவிகள் பெற்றதற்கான வழங்கல் ஆணை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். அல்லது வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று, நில வரைபடம், ஆதார் அட்டை, மற்றும் ஒளிமநகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன்பெறலாம். தாங்கள் செலுத்திய வாடகையை பின்னேற்பு மானியமாக தங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 9443957921 என்ற எண்ணிலும், திருத்தணி எண்.27, பல்லவன் கிராம வங்கி அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 9843701281 என்ற எண்ணிலும், பொன்னேரி எண்.20, சக்தி நகர், மாடன் பள்ளி அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை 9789597447 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story