ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம்
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு-2023 தொடர்பான அறிவிப்பினை கடந்த 3.4.2023 அன்று வெளியிட்டது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்டவைகளில் குரூப்-8 மற்றும் குரூப்-சி நிலையில் 7,500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
இந்த தேர்வுக்கு நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயதுவரம்பு, தேவையான கல்வித்தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
இணையதள விண்ணப்பம்
மேலும் விவரங்கள் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியிலும் உள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023(புதன்கிழமை) மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.5.2023(வியாழக்கிழமை) ஆகும்.தமிழ்நாட்டில் இத்தேர்வு 7 மையங்களில் நடத்தப்படும். இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பு
மேலும், 'https://tamilnaducareerservices.tn.gov.in/' என்ற இணையதளத்திலும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'எய்ம் டி.என்' என்ற யுடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொலியை கண்டு பயன்பெறலாம்.
இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






