வேளாண் எந்திரங்கள் பழுது நீக்கும் மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்


வேளாண் எந்திரங்கள் பழுது நீக்கும் மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள் பழுது நீக்கும் மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்கும் நோக்கத்துடன் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன. இம்மையங்கள் தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மானியத்தில் அமைத்து தரப்படும். இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சம் ரூ.4 லட்சம் மானியமாக வழங்கப்படும். இம்மையங்கள் அமைத்திட போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பு கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தினை அணுகி விண்ணப்பம் அளிக்கலாம்.

பின்னேற்பு மானியம்

விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும். மையங்கள் அமைக்க தேவையான எந்திரங்கள் ஒப்பந்த புள்ளி அடிப்படையில் கண்காணிப்பு பொறியாளரால் முடிவு செய்யப்பட்டு பயனாளிகள் மொத்த தொகையை செலுத்தி வாங்கி கொள்ளலாம். பின்னர் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர், மையத்தை நேரில் ஆய்வு செய்து பயனாளியின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் மற்றும் வெள்ளிமலை வட்டம் சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல்துறை, வெற்றிவேல் காம்ப்ளக்ஸ், தச்சூர் கூட்டுரோடு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும், திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, 45/72 பெரியார் தெரு, என்.ஜி.ஜி.ஓ.நகர், திருக்கோவிலூர் என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story