கலப்புத் திருமணம் செய்தவருக்கு 4 வாரத்தில் பணி நியமனம் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


கலப்புத் திருமணம் செய்தவருக்கு 4 வாரத்தில் பணி நியமனம் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

கலப்புத் திருமணம் செய்தவரை ஆய்வக உதவியாளராக நியமித்து 4 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தேர்வில், திருப்பூரைச் சேர்ந்த இளங்கோ என்பவர், கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தார். தேர்வில் 115 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் மற்றும் கலப்பு திருமணம் புரிந்து கொண்டவருக்கான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, பணிநியமனத்துக்கு அவர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. காலதாமதமாக சான்றிதழ்களை சமர்ப்பித்த அவர், ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் 2017-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சான்றிதழ்களை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக வேலைவாய்ப்பு வழங்க மறுக்க முடியாது. மனுதாரரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதால், மனுதாரரை ஆய்வக உதவியாளராக நியமித்து 4 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்


Next Story