அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - கலெக்டர் தகவல்


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 July 2022 11:59 PM GMT (Updated: 4 July 2022 3:25 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான காலி பணியிட விவரங்கள் முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் கடந்த 2-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் வருகின்ற 6-ந் தேதி ஆகும்.

குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் காலி பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி பின்வருமாறு:- திருத்தணி கல்வி மாவட்டம் deotiruttani@gmail.com, திருவள்ளூர் கல்வி மாவட்டம் deotlr@nic.in, ஆவடி கல்வி மாவட்டம் deoaavadi@gmail.com, அம்பத்தூர் கல்வி மாவட்டம் deoambt@gmail.com, பொன்னேரி கல்வி மாவட்டம் deopon@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story