அடைக்கலாபுரத்தில் தையல் பயிற்சி மாணவி தூக்கு போட்டு தற்கொலை


அடைக்கலாபுரத்தில் தையல் பயிற்சி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:47 PM GMT)

அடைக்கலாபுரத்தில் தையல் பயிற்சி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையத்தில் தங்கியிருந்த தையல் பயிற்சி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தையல்பயிற்சி மாணவி

திருச்செந்தூர் அருகே புனித சூசை அறநிலையத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சைனி (வயது 20). இவர் பிறந்த 14 நாட்களில் ஆதரவற்ற நிலையில் 5.8.2005-ந் தேதி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் 9.8.2005-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக திருச்செந்தூர் அருகிலுள்ள அடைக்கலாபுரம் சூசை அறநிலையத்தில் சேர்க்கப்பட்டார். அன்று முதல் அங்கு தங்கி படித்து வந்தார்.

தற்போது அவர், அங்குள்ள தையல் பயிற்சி பள்ளியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சக மாணவிகளின் பெற்றோர் அவரவர் குழந்தைகளை வந்து பார்த்து செல்வதனாலும், விடுமுறை நாட்களில் சக மாணவிகள் வீட்டிற்கு சென்று வருவதையும் பார்த்து அவர் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். தான் அனாதையாக இருப்பதை நினைத்து அவர் சகமாணவிகளிடம் அவர் வேதனை தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அனாதை என்பதால் வெளியில் எங்கும் செல்லாமல் அறநிலையத்திலேயே தங்கி இருப்பதையும் நினைத்து மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

தூக்கில் தொங்கினார்

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சைனியை காணவில்லை என சக மாணவிகள் தேடியுள்ளனர். அப்போது அங்குள்ள குளியலறை அருகே உள்ள மரத்தில் வேஷ்டியால் தூக்கி போட்டு சைனி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story