நீர்நிலை ஆக்கிரமிப்பு - சென்னை ஐகோர்ட்டு வேதனை


நீர்நிலை ஆக்கிரமிப்பு - சென்னை ஐகோர்ட்டு வேதனை
x

கோப்புப்படம்

நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பால் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை,

அரசு அதிகாரிகளின்அலட்சியம் காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கு ஐகோர்ட்டின் உத்தரவின்படி மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஐகோர்ட்டு தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அடங்கிய அமர்வின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து நீதிபதிகள் கடுமையான அதிருப்தியை தெரிவித்தனர். மேலும் இயற்கை கொடையாக அளித்த பல்வேறு நீர்நிலைகள் தமிழகத்தில் இருக்கின்றன. இருந்தாலும் கூட வேலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வழங்கப்படுகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளதாக தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார்.

இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்கிற அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கு தான் இந்த நிலைக்கு காரணம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருக்கிற அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் இவர்கள் எதற்காக ஊதியம் பெறுகிறார்கள் என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோல மற்றொரு வழக்கில், அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்வதில் குறைபாடு இருந்தால் அதற்கு காரணம் அரசாகத்தான் இருக்க முடியும் என்றும் பொதுமக்களுக்காக எந்த அதிகாரிகளும் தங்கள் பணியை செய்வது இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டை நீதிபதிகள் முன்வைத்தனர்.

பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த ஒரு பணியையும் செய்வதில்லை என்று சுட்டிக்காட்டியதுடன் இந்த நிலைமை தமிழ்நாட்டில் மட்டுமில்லை நாடு முழுவதும் இதே நிலை தான் நிலவுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story