மாறிவரும் உணவு பழக்கம் ஆரோக்கியம் தருவதா? ஆபத்தானதா?


மாறிவரும் உணவு பழக்கம் ஆரோக்கியம் தருவதா? ஆபத்தானதா? என்பது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

உணவை மிருகங்கள் போல் பச்சையாக உண்டு வாழ்ந்த ஆதிமனிதன், நெருப்பை மூட்டிச் சுட்டுத்தின்னவும், வேகவைத்து சாப்பிடவும் கற்றுக்கொண்டான்.

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் உணவும், அதை உட்கொள்ளும் விதமும் மாறிக்கொண்டே வருகின்றன.

துரித உணவுகள்

தான் வாழும் மண்ணில் விளைந்த தானியங்களையும், காய்கறிகளையும், தன்னைச் சார்ந்து வாழும் மிருகங்களையும், பறவைகளையும் உணவாக்கிக்கொண்டான். அவை உணவாக மட்டுமல்லாமல், அவனுக்கு மருந்தாகவும் அமைந்தன.

இன்று அறிவியல் வளர்ச்சி, நாகரிக எழுச்சி, உலகமயமாதல் போன்ற நவீனங்களால் உலகில் எங்கோ விளைந்த பொருட்கள் நமக்கு உணவாக வந்து நமது இறைப்பைகளை நிரப்புகின்றன.

பீசா, பர்கர், சவர்மா என்று புதுப்புது பெயர்கொண்ட துரித உணவுகள் இளைஞர்களை எச்சிலூறச் செய்கின்றன.

உள்ளூர் உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன. ருசிக்கு மாற்றார் உணவை நமது நாக்குகள் நொட்டையிட்டு ஏற்றுக்கொண்டாலும், உடலோ ஒவ்வாமையால் ஏற்க மறுத்து புதுப்புது நோய்களையும், அதற்கான மருந்துகளையும் வரவழைக்கின்றன. பக்க விளைவுகளையும் அனுபவிக்கின்றன.

ஆரோக்கியமா? ஆபத்தா?

சவர்மா சாப்பிட்ட ஓர் இளம்பெண் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் உயிர் இழந்தார். நாமக்கல்லை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சிலதினங்களுக்கு முன்பு 'சவர்மா' சாப்பிட்டதில் பலியானார். 43 பேர் சிகிச்சை பெற்றனர்.

அதுபோல் நாமக்கல்லில் `பர்கர்' சாப்பிட்ட கல்லூரி மாணவருக்கு உடல்நலம் பாதிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளியில், 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட 26 பேருக்கு உடல்நலக்குறைவு போன்ற செய்திகளை தினசரி காணுகின்றபோது நமது உணவு பழக்கமும், இளைய தலைமுறைகளும் எங்கே போய்க்கொண்டு இருக்கின்றன? என்று கேட்கத்தோன்றுவதுடன், ஆதங்கப்படவும் வைக்கின்றன.

இதுபோன்ற உணவு வகைகள் ஆரோக்கியம் தருகிறதா? ஆபத்தை விளைவிக்கிறதா? என்பது பற்றி இயற்கை ஆர்வலர்கள் கூறும் கருத்துகள் சிலவற்றைக் காண்போம்:-

ஆரோக்கிய சமுதாயம்

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கூறும்போது, 'வாழ்க்கையில் நீண்ட காலம் நோய், நொடி இன்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு பழக்க வழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக 'ஜங்க் புட்' என்று அழைக்கப்படும் பீசா, பர்கர், சவர்மா போன்ற உணவுகளைத்தான் 10 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் இந்த வகை உணவுகளுக்கு அடிமையாகிவிடுவதுடன், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளையும் அவர்கள் விரும்புவதில்லை. 'பாஸ்ட் புட்' என்று அழைக்கப்படும் விரைவாக தயாரித்து வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் உடம்புக்கு பயனில்லாத பொருட்கள் அதிகம் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு அஜீரணம், வயிற்றுவலி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுகின்றன. நமது உணவு முறைகளில் மைதா, கியாஸ் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், வெள்ளை சர்க்கரை (சீனி), அஜினோமோட்டோ போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களால் உடலுக்கு உபாதைகள்தான் ஏற்படும். அத்துடன் வெள்ளை ரொட்டி, நூடுல்ஸ், சேமியா போன்றவற்றில் மைதா சேர்க்காததை வாங்கி வீட்டில் சமைத்து உண்ணலாம். காய்கறிகள் மற்றும் சிறுதானிய உணவுகளை ருசியாக தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கி ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும்'.

தண்டனை உறுதி

மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சுதா ராணி கூறியதாவது:-

இந்திய உணவுப்பொருள் பாதுகாப்பு தரச்சட்டம் 2006-ல் உருவாக்கப்பட்ட சட்டம். இச்சட்டம் உணவுப்பொருள் உற்பத்தி, சேமித்தல், வழங்குதல், விற்பனை செய்தல் மற்றும் இறக்குமதி செய்தல் ஆகிய அனைத்து நடவடிக்கையையும் ஒழுங்குபடுத்த உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

இச்சட்டப்படி உணவுப்பொருளில் கலப்படம் செய்தல் மற்றும் மக்களுக்கு உடனடியாகவோ அல்லது நாளடைவிலோ பாதிப்பு ஏற்படும் வகையிலான உணவு சார்ந்த பொருள்களை தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக கருதப்படுகிறது.

இச்சட்டப்படி கெடுதலான உணவுப்பொருளை உட்கொண்டதால் பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு நிவாரணத்தொகை வழங்குதல் மற்றும் அத்தகைய வகையில் கெடுதலான பொருளை விற்பனை செய்தல் அல்லது தயாரித்து வழங்குதல் ஆகிய செயல்களை செய்தவர்களுக்கு தண்டனை வழங்குதல் என இரு வகையிலான நடைமுறைகளும் பின்பற்றப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சட்டப்படி பாதிக்கப்பட்ட நபருக்கு பாதிப்பிற்கு ஏற்ப ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை நிவாரணத்தொகையாக தவறு செய்த நபரால் வழங்கப்படவேண்டும்.

மேலும் தவறு செய்த நபருக்கு தண்டனையாக 7 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. இப்பிரச்சினைகள் நுகர்வோர் சம்பந்தப்பட்ட நடைமுறைகளை கொண்டுள்ளதால், நுகர்வோர் கோர்ட்டுகளில் வழக்குப்பதிவு செய்து உரிய நீதி வழங்கப்படும்.

ரத்தக்குழாயில் அடைப்பு

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர், டாக்டர் சங்குமணி:-

மாறிவரும் உணவு பழக்கங்கள் ஆரோக்கியமானதா என்ற கேள்விக்கு இடமில்லை. இந்த உணவு வகைகளில் சேர்க்கப்படும் அஜினோமோட்டோ என்ற வேதியியல் பொருள் உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை உடையது. அதிலும் குறிப்பாக ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தும் உணவு குழாய்களிலும், இரைப்பையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் அதிலும் பெற்றோர் பீசா, பர்கர், சவர்மா போன்ற உணவு வகைகளை தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இது குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இல்லையேல் பல்வேறு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்துக்கு மாற்று இடமில்லை.

வீடியோக்களை பார்த்து

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா சிகிச்சைப்பிரிவு டாக்டர் நாகராணி:- 'இயற்கை மருத்துவத்தில், உணவு தான் மருந்து. ஆனால், சவர்மா விஷயத்தில், உணவே விஷமாக மாறி இருக்கிறது. சவர்மா உணவானது, ஒரு அரேபியன் வகை உணவு.

இறைச்சியை மசாலாவுடன் இணைத்து வித்தியாசமான முறையில் சாப்பிடும்போது, மக்களுக்கு ஒரு புதுவித சுவையை கொடுக்கிறது. மாறுபட்ட உணவினை சாப்பிட்டு பார்ப்பதற்கு மக்கள் எப்போதும் விரும்புவார்கள். அப்படிதான் இந்த சவர்மா உணவு பிரபலமாகி உள்ளது. சவர்மாவில் கொழுப்பு நிறைந்துள்ளது. இதனால் இதய நோய்கள், இரைப்பை குழாயில் பிரச்சினை உண்டாகும். பசியுடன் இருக்கும்போது இதனை சாப்பிட்டால் கணையமும் பாதிக்கப்படும் என கூறுகிறார்கள்.

சவர்மா போன்ற துரித உணவுகளை சாப்பிடுவதற்கென நேரம் இருக்கிறது. விலை மலிவு, தரமில்லாத கடைகளில் சவர்மா போன்ற உணவுகளை சாப்பிடுவதாலும், நேரம் தவறி சாப்பிடுவதாலும் ஆபத்து வருகிறது. இரவு 8 மணிக்கு மேல் இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டால், விஷமாக மாறும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இரவு 8 மணிக்குள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்.

எந்த உணவாக இருந்தாலும், உணவின் செரிமானமானது, இயற்கையானதாக இருக்க வேண்டும். சோடா, சுடுதண்ணீர், குளிர்பானங்கள் போன்ற எந்த ஒரு பொருளின் உந்துதலும் இல்லாமல் செரிமானம் இருக்க வேண்டும்.

உணவு சாப்பிட்ட பின்பு மனதுக்கும், வயிற்றுக்கும் இனிமையான உணர்வு ஏற்பட வேண்டும். நெஞ்சு எரிச்சல், அதிக தாகம், அதிக தூக்கம் போன்றவை இருக்கக்கூடாது. இவ்வாறு இருந்தால் சாப்பிட்ட உணவு சரியில்லை என அர்த்தம்.

உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். அதற்கு காய்கறிகள், சிறுதானிய உணவுகள்தான் சரியானது. ஆனால், சவர்மா சுவையூட்டிகளால் தயாரிக்கப்பட்டது. அது கண்டிப்பாக பின்விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோன்ற உணவுகளை தவிர்ப்பதில் மக்களுக்கும், சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

மக்கள் கூடுதல் விலை கொடுத்துக்கூட சுத்தமான, தரமான பொருட்களை வாங்க தயாராக இருக்கிறார்கள். இதனால், உணவகங்கள் நல்ல உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எதை சாப்பிட்டாலும் செரிமானம் ஆகிவிடும் என கூறுகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. தற்போதுள்ள குழந்தைகள் யூ-டியூப் சேனல்களில் வீடியோக்களை பார்த்து கவர்ந்திழுக்கப்பட்டு, இதுபோன்ற உணவுகளை சாப்பிடுகிறார்கள். இதனை பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். துரித உணவுகளை சாப்பிடக்கூடாது. அதனால் எப்போதும் ஆபத்துதான். புதுவிதமான உணவுகளை ருசி பார்ப்பதில் தவறில்லை. இருந்தாலும் அதிலும் பொறுப்புணர்வுடன் இருந்தால் உடலுக்கு தீங்கு ஏற்படாது'.

சிறுதானிய உணவு

விருதுநகரை சேர்ந்த இல்லத்தரசி சுப்புலட்சுமி:-

கடந்த காலங்களில் வீடுகளில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பது வழக்கமாக இருந்து வந்தது. சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் சத்துமாவு, கேப்பைக்கூழ், வரகு கஞ்சி என குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமாக இருந்தது. குழந்தைகளும் ஆரோக்கியமாகவே இருந்தனர்.

ஆனால் சமீபகாலமாக பாஸ்ட் புட் வகைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பது பழக்கமாகிவிட்டது. இது முற்றிலுமாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு என்னென்ன உணவு கொடுக்கிறீர்கள் என்று கேட்டால் இந்த பர்கர், பீசா என நவீன தாய்மார்கள் அடுக்கும்போது டாக்டர்கள் கடுமையாக எச்சரிப்பதை பார்க்க முடிகிறது எனவே மாறிவரும் உணவு பழக்கங்கள் ஆரோக்கியமானதாக இருந்தால் வரவேற்கக் கூடியதுதான். ஆனால் இவை ஆபத்தை வரவழைக்கக் கூடியதாக இருப்பதால் இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story