கரூரில், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் முறையாக பராமரிக்கப்படுமா?


கரூரில், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் முறையாக பராமரிக்கப்படுமா?
x

கரூர் பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் முறையாக பராமரிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

தாய்ப்பால்

ஒரு தாய் தனது குழந்தைக்கு பிறந்த ஒரு வருடம் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு நல்லதாகும். இதனால் கைக்குழந்தைகளோடு பயணம் செய்யும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தேவையான நேரத்தில் தாய்ப்பாலை வழங்குவார்கள். இவ்வாறு பொது இடங்களில் வைத்து தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்மார்கள் சற்று சிரமம் அடைகின்றனர். இதே போல் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பஸ் நிலையங்களில் தாய்மார்களின் நிலை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை அவர்கள் மறைவாக தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பார்கள்.

ஜெயலலிதா தொடங்கிய திட்டம்

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்றான தாய்மார்கள் பாலூட்டும் அறையாகும் அதாவது பஸ் நிலையங்களில் தாய்மார்கள் ஒரு அறையில் இருந்து எவ்வித சிரமமும் இல்லாமல் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில் இத்திட்டத்தை தொடங்கினார்.

இத்திட்டம் பெண்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது இதனால் பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை என தனியாக அறை ஒதுக்கப்பட்டது அந்த அறையில் பெண்கள் அமர்ந்து குழந்தைகளுக்கு பாலூட்டும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு மேலும் மின்விசிறிகள் மின் விளக்குகள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

துப்புரவு பணியாளர்கள் உறங்குகின்றனர்

கரூரை பொறுத்தவரை பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஒன்று ஆவின்பாலகம் அருகில் உள்ளது. இந்த அறையில் தினமும் சுமார் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் வரை தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட வந்து செல்வதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். தாய்மார்கள் பாலூட்டும் அறையில் உள்ளே பெண்கள் அமர்வதற்கு இருக்கைகலும் போடப்பட்டு உள்ளன ஏனெனில் அந்த அறையின் உள் நுழைந்தவுடன் அதன் ஓரப்பகுதிகளில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் துடைப்ப கட்டை வாளி உள்ளிட்ட பொருட்களை வைத்துள்ளனர்.

மேலும் மதிய வேலைகளில் அந்த அறையில் துப்புரவு பணியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அறைக்குள் சென்று அதன் பின்புறம் உள்ள குடிநீர் குழாய் இணைப்பு உள்ள பகுதியில் கை கால்களை சுத்தம் செய்வதுடன் துப்புரவு பணியில் ஈடுபடும் பெண்கள் சிலர் அங்கே படுத்து உறங்குவதையும் காண முடிகிறது. இதனால் பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறையில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வரும் தாய்மார்கள் சிலர் சற்று தயக்கத்துடனே அங்கிருந்து செல்வதை காண முடிகிறது. எனவே அங்கு உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி பாலூட்டும் தாய்மார்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அந்த அறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பயன் உள்ளதாக உள்ளது

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், கரூர் பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பெண்களுக்கு பயனுள்ளதாக உள்ளது பஸ் நிலையத்திற்கு கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் இந்த அறையை பயன்படுத்துகின்றனர். பகலில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் இந்த அறை திறந்து இருக்கும் பொது இடத்தில் வைத்து பெற்ற குழந்தைக்கு ஒரு தாய் பாலூட்டும் போது சேலை முந்தனையால் மறைத்துக் கொண்டு சற்று மறைவை நோக்கி செல்வதுண்டு. ஆனால் இந்த அரையானது தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்ட வசதியாக உள்ளது. இருப்பினும் மதிய வேலைகளில் இங்கு துப்புரவு பணியில் ஈடுபடும் ஆண்கள் மற்றும் பெண்கள் இங்கு வந்து கை கால்களை தண்ணீரால் சுத்தம் செய்து கொண்டு செல்கின்றதை தடுத்து ஆண்கள் உள்ளே வருவதை தடுக்க வேண்டும், என்றனர்.


Next Story