அத்தை வீட்டில் திருடிய தொழிலாளி கைது


அத்தை வீட்டில் திருடிய தொழிலாளி கைது
x
திருப்பூர்


தாராபுரம் அருகே அத்தை வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி பாத்திரத்தை திருடி சென்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது பற்றி தாராபுரம் போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீட்டில் பாத்திரங்கள் திருட்டு

தாராபுரம் அடுத்த டி.காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராமாத்தாள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் தோட்ட வேலை சம்பந்தமாக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தனர். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்த ராமாத்தாள் கதவை திறந்து பார்த்த போது வீட்டின் மேல் கூரையில் ஓடு பிரித்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தனது கணவர் சரவணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது வீட்டிற்கு வந்த சரவணன் வீட்டில் உள்ள பொருட்களை பார்த்த போது விலை உயர்ந்த பாத்திரங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து தாராபுரம் போலீசில் சரவணன் புகார் கொடுத்தார்.

வாலிபர் கைது

இது தொடர்பான புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான முத்துசாமி மகன் இளங்கோ (வயது 22) , என்பவர் தனது நண்பர் முத்துகுமார் (35) என்பவருடன் சேர்ந்து ராமாத்தாள் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து இறங்கி இருவரும் பாத்திரங்களை திருடி சென்றதாக ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் அத்தை ராமாத்தாள் வீட்டியில் திருடிய இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான நண்பர் முத்துகுமாைர தேடிவருகிறார்கள்.


Next Story