இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்


இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம்
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்திய ராணுவத்தில் அதிகாரிகள் மற்றும் பிற பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக joinindianarmy.nic.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் விண்ணப்பித்த அனைவரும் பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். 2-ம் கட்டமாக பட்டியலிடப்பட்டவர்கள் அந்தந்த ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகங்களில் பேரணிக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு உடல்தகுதி மற்றும் உடல் அளவீட்டு சோதனை நடத்தப்படும். 3-வது கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் ஆன்லைன் பதிவு 20-ந்தேதி வரை திறந்திருக்கும். ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்யலாம். ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் 176 இடங்களில் நடத்தப்படுகிறது. ரூ.250 தேர்வு கட்டணத்தை டெபிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு ரோல் எண் வழங்கப்படும். தேர்வு குறித்து குறுந்தகவல், இமெயில் மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் தேர்வில் கலந்து கொள்ளலாம். பொது நுழைவுத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆட்சேர்ப்பு பேரணிகளுக்கு அழைக்கப்படுவார்கள். ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முடிவு மற்றும் உடல் நிலை தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு இறுதி தகுதி முடிவு செய்யப்படும் என்று கூறினார். அப்போது உதவி ஆள்சேர்ப்பு அலுவலர் நீலம் குமார் உடனிருந்தார்.


Next Story