கடன் தொல்லையால் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி - கொசு மருந்து குடித்ததுடன், பிளேடால் கையை அறுத்தார்


கடன் தொல்லையால் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி - கொசு மருந்து குடித்ததுடன், பிளேடால் கையை அறுத்தார்
x

கடன் தொல்லையால் ஆயுதப்படை பெண் போலீஸ் கொசு மருந்து குடித்தும், பிளேடால் கையில் அறுத்தும் தற்கொலைக்கு முயன்றார்.

சென்னை

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்டெல்லா (வயது 24). இவர், ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னை அமைந்தகரை, கலெக்ட்ரேட் காலனி, வ.உ.சி. நகரில் தங்கி பணிக்கு சென்று வந்தார். இவருடைய கணவர் பாண்டியன். இவர், டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

நேற்று முன்தினம் ஸ்டெல்லா, தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு ரூ.8 லட்சம் வரை கடன் இருப்பதாகவும், கடன் தொல்லை அதிகமாகி உள்ளதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், சென்னையில் உள்ள அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஸ்டெல்லாவின் தந்தை நடராஜன், மகள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு இருந்தது.

கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஸ்டெல்லா கைகளில் பிளேடால் அறுத்து கொண்டும், வாயில் நுரை தள்ளியபடி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ஸ்டெல்லாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தினர். பெண் போலீஸ் ஸ்டெல்லாவுக்கு ரூ.8 லட்சம் வரை கடன் இருந்ததால் கடன் தொல்லையால் தனது தாய்க்கு செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு கொசு மருந்து குடித்ததுடன், பிளேடால் கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

மேலும் அவரது தற்கொலை முயற்சிக்கு வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story