ராசிபுரத்தில் ரெயில்கள் நின்று செல்ல ஏற்பாடு - கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தகவல்


ராசிபுரத்தில் ரெயில்கள் நின்று செல்ல ஏற்பாடு - கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தகவல்
x
தினத்தந்தி 25 Jun 2023 6:45 PM GMT (Updated: 26 Jun 2023 10:47 AM GMT)

எனது கோரிக்கையை ஏற்று ராசிபுரத்தில் ரெயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. கூறியுள்ளார்.

நாமக்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான கொல்லிமலை உள்ளது. அங்கு செல்வதற்கு ராசிபுரம் ரெயில் நிலையம் முக்கிய சந்திப்பாக விளங்குகிறது. மேலும் பட்டு, சேகோ மற்றும் கோழிப்பண்ணை போன்ற பல்வேறு வணிக மையங்களுக்கு முக்கிய மையமாக இந்த ரெயில் நிலையம் உள்ளது. ஆனால் மிக குறைவான ரெயில்கள் மட்டுமே நின்று செல்வதால், ரெயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே விரைவு ரெயில்களை ராசிபுரம் ரெயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 15-ந் தேதி இந்திய ரெயில்வே வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் லகாடியிடம் கோரிக்கை மனு அளித்திருந்தேன்.

இந்த கோரிக்கையை ஏற்று வருகிற ஜூலை மாதம் முதல் சோதனை அடிப்படையில் சென்னை-பாலக்கோடு (22651) தினசரி விரைவு ரெயில் அதிகாலை 3.10 மணிக்கும், நாகர்கோவில்-பெங்களூரு (17236) தினசரி விரைவு ரெயில் அதிகாலை 3.20 மணிக்கும் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல் ராமேஸ்வரம்-ஓஹா வாராந்திர ரெயில் (இரு மார்க்கத்தில் 16733, 16734) ராசிபுரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோரிக்கையை ஏற்று ராசிபுரம் ரெயில் நிலையத்தில் 3 விரைவு ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை மேற்கொண்ட ரெயில்வே துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனவே ராசிபுரம் பகுதியை சேர்ந்த ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு பயணச்சீட்டை முன்பதிவு செய்து தொடர்ந்து ரெயில் நிறுத்த சேவையை பயன்பத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story