இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; புகைப்படக்காரர் மீது வழக்கு

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம்- ராசிபுரம் மெயின் ரோட்டில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 51). இவருடைய ஸ்டூடியோவுக்கு சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் போட்டோ எடுக்க சென்றதாக தெரிகிறது. அப்போது ஸ்டூடியோவில் கிருஷ்ணமூர்த்தி அந்த இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் நாமக்கல்லில் உள்ள தனது தம்பியிடம் நடந்ததை கூறி அழுதாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் தம்பி தனது நண்பர்களுடன் ஸ்டூடியோவுக்கு சென்று புகைப்படக்காரர் கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கினார்களாம். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






