தர்மபுரி அருகேசந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு


தர்மபுரி அருகேசந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2023 7:00 PM GMT (Updated: 12 Aug 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி அருகே மோட்டார் சைக்கிளில் சந்தன கட்டைகளை கடத்திய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்திய வனத்துறையினர் ரூ.3 லட்சம் அபராதம் விதித்தனர்.

சந்தன கட்டைகள் கடத்தல்

தர்மபுரி மாவட்டம் இண்டூர் போலீசார் நாகர்கூடல்- பண்டஅள்ளி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அவர்கள் பாப்பாரப்பட்டி அருகே உள்ள சொரக்காப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 53), சஞ்சீவபுரத்தை சேர்ந்த சரவணன் (40) என்பது தெரிய வந்தது.

அப்போது அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் சந்தன கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் சந்தன கட்டைகளுடன் சிக்கிய 2 பேரை கைது செய்து தர்மபுரி வன அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் சந்தன கட்டைகளை கடத்திச் செல்வது உறுதியானது.

ரூ.3 லட்சம் அபராதம்

இதையடுத்து 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவிட்டார். கடத்தப்பட்ட சந்தன கட்டைகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சந்தன கட்டை கடத்தலில் சிக்கிய 2 பேரும் அவற்றை எங்கே கொண்டு செல்கிறார்கள்? சந்தன கட்டைகளை வாங்கி விற்பவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story